நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!
| [ 1]
|
சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல் ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம், நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர் கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!
| [ 2]
|
செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர் அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம் கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல் ஏறு உடை நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?
| [ 3]
|
தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச் சிந்த வெந்த கதிரோனொடு மாசு அறு திங்கள் ஆர் அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம் எந்தை வெந்தபொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே.
| [ 4]
|
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து போய் உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர் புனல் அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் இறை, எம் ஈசன், எம்மான், இடம் ஆக உகந்ததே.
| [ 5]
|
Go to top |
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்! ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல் ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.
| [ 6]
|
வெருவி வேழம் இரிய, கதிர் முத்தொடு வெண்பளிங்கு உருவி வீழ, வயிரம் கொழியா, அகில் உந்தி, வெள் அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம் மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே.
| [ 7]
|
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான், ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம் வாரம் ஆகி நினைவார் வினைஆயின மாயுமே.
| [ 8]
|
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய் எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.
| [ 9]
|
மா பதம் அறியாதவர் சாவகர்சாக்கியர், ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் ஆ பதம் அறிவீர் உளிர் ஆகில், அனேகதங் காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் ருமமே.
| [ 10]
|
Go to top |
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன் அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம் சொல்ல, நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.
| [ 11]
|